Thursday, May 31, 2012

வண்டல் மண் கதைகள் - 3

”டேய் குவாட்டர் ஃபைனல்ல நம்ம கூட மோதப் போறது சில்லத்தூர் டீம், செம்ம ஃபார்ம்ல இருக்காய்ங்க, இன்னைக்கு கண்டிப்பா மதியரசன எப்படியாச்சும் போட்டு இழுத்துகிட்டு போயிடனும், இவய்ங்கள மட்டும் ஜெயிச்சிட்டோம்னு வெய்யி கப்பு நமக்குதான்” என்றான் கையில் கிரிகெட் பேட்டோடு நின்று கீழே கிடந்த கரும்பு சக்கையை பந்தாக பாவித்து தட்டியடியே நின்ற கோபு. 

”அவன எங்கடா இப்பயெல்லாம் பாக்க முடியுது,முந்தா நாளு பாத்தேன், மேச்சு இருக்குடா போகனும்னு சொன்னேன், உளுந்து அரிக்கணும், வேல இருக்குன்னான், சரின்னுட்டு இப்போ போனடிகிறேன், ரிங்கு போயிட்டே இருக்கு எடுக்க மாட்டேங்கிறான்டா” என்றான் தங்கப்பன்.

பக்கத்து ஊரில் நடக்கும் கிரிக்கெட் மேட்சில் ரெண்டு ரவுண்ட் ஜெயித்துவிட்டு இதோ இன்னைக்கு நடக்கவிருக்கும் குவாட்டர் ஃபைனலுக்கான மேட்சுக்கு, டீமை இன்னும் ஸ்ட்ராங்காக்கத்தான் மதியரசன தேடிகிட்டு இருக்காய்ங்க. மதியரசன்தான் இவைங்க டீமின் ஆல் ரவுண்டர். ஓப்பனிங் பௌலிங்கும் சரி ,பேட்டிங்கும் சரி அவந்தான். முக்கியமா பௌலிங்கில் கிராமத்தானுங்களுக்கே உரிய மாங்கா அடியை இடையிடையே வீசி , நல்லா ஆடிட்டு இருக்கிறவய்ங்கள க்ளீன் போல்டாக்குவதில் மன்னன்.

“என்னாது உளுந்து அரிக்கிறானா, நீ வேற அவந்தான் வத்தலாம்பட்டியிலேயே குடியா கெடக்குறான்டா, அவரு வேற முக்கிய சோலியா திரியிறாரு” என்று கண்ணடித்து நக்கலாச் சிரித்தான் முத்துக்குமார்.

முத்துக்குமார் ஏதோ அவல் கொண்டுவந்ததை அறிந்து ஆசையாய் மெல்லும் ஆவலில் எல்லோரும் ஆர்வமாய் அவனை என்னடா சொல்ற என்பதாய் பார்க்க, முத்து தொடர்ந்தான்,

“டேய் வத்தலாம்பட்டி வசந்தா தெரியுமா? அதான்டா செண்டுக்காரி, அந்த பொம்பளைகிட்ட மதி அப்பாரு பேச்சு வார்த்தையிலே இருக்காராம் ” என்றுவிட்டு சிரித்தான்.

“அது பெரும் பார்ட்டில்ல , எப்படிடா இவரோட லிங்கானுச்சு, நம்புற மாதிரி இல்லையே” என்றான் கோபு.

”நெசமாத்தான்டா அந்த பொம்பள ஊரணிகாட்டு பேங்குக்கு அடிக்கடி குழு பணம் கட்ட போகும் , அது மாதிரி போகையிலே எப்பயோ கடைசி பஸ்ஸ விட்டுட்டு நின்னிருக்கு, நம்ப மதியப்பாரு அப்போன்னு பார்த்து அங்கிட்டு வண்டியிலே வந்திருக்காரு , அப்படியே பிக்கப் பண்ணவருதான் இன்னும் இறக்கி விடலயாம் ” என்றுச் சொல்லி சிரித்த முத்து தொடர்ந்தான்.

மதி அம்மா இத பத்தி அரச பொரசலா கேள்விப்பட்டு கேட்டப்பயெல்லாம் இல்லேன்னு அடிக்க போயிருக்காரு, ஆனா அவ்வோ ரெண்டு பேரும் சோடிபோட்டுகிட்டு போனத நம்ம ஊரு பொம்பளைக யாரோ பாத்துட்டு மதியம்மாகிட்ட சொல்ல , வேற வழியில்லாம மதிகிட்ட வெவரத்த சொல்லி அழுதிருக்கு அவ்வோ அம்மா. அதான் மதிப்பய ரெண்டு பேரையும் கையுங் களவுமா புடிக்கிறேன்னு யாருக்கும் சொல்லாம அங்க போயி சுத்திகிட்டு இருக்கான். இந்த கூத்து நாலஞ்சு மாசமா நடந்துகிட்டு இருக்கு, உங்களுக்குத்தாண்டா தெரியாம இருந்திருக்கிய” என்று முடித்தான்.

“அந்த பொம்பளைக்கு எளசா இருந்தா கசக்கும்போல, பாரு முன்னாடி வெட்டிக்காட்டு மணியாரு இப்போ மதி அப்பாரு” என்று சிரித்தான் கோபு.

”இதுல என்ன காமெடின்னா நேத்து மதி அப்பாரு எங்க அப்பாருகிட்ட ‘இந்த பய அங்கயே சுத்திகிட்டு மானத்தை வாங்கிட்டு இருக்கான், அவன் பண்ணுறது ஒன்னும் மொறையில்ல, பாக்குறவய்ங்க என்ன நெனப்பாய்ங்க,ஓ மவன்கிட்ட சொல்லி கொஞ்சம் அவனை கண்டிக்க சொல்லுய்யான்’னு பொலம்பியிருக்காரு” என்றான் முத்து.

“நல்லாயிருக்குடா கதை அந்தாளு அங்க போறதுமில்லாம ..”என்று ஆரம்பித்த கோபு ,“ஏ தம்பியளா ” என்றபடியே பாலகட்டைய நோக்கி மதியம்மா வந்துகிட்டு இருந்துதத பார்த்ததும்.”அடிச்சாம் பாரு சிக்சு” என டக்குன்னு பேச்சை மாத்தினான் .

“என்ன சின்னம்மா என்னா விசியம் மதி எங்க? கொல்லையிலயா நிக்குறான்?” என்றான் முத்து வெகுளியான முகத்தோடு.

“ம்ம் கொல்லையில நிக்குறானா? ஏன் அவன் எங்க போறான் வறான்னு உங்களுக்கு தெரியாதா?” என்று கோபமாய் ஆரம்பித்தவள், சட்டுன்னு தணிந்து ”யப்பா நல்லாயிருப்பியய்யா, எம்புருஷன் இருக்கானே ஊர் மேயிர நாயி,அது எப்படியாச்சும் போயி தொலையிது, எம்புள்ளய கொண்டு வந்து சேத்துருங்கய்யா, ஆயி மாதிரியே இருந்திருக்காளே மவளும்” என்று ஒப்பாரி வைத்தாள்.

3 comments:

'பரிவை' சே.குமார் said...

வண்டல் மண் வாசம் வீசுகிறது.
அருமை.

manjoorraja said...

ஜோடி சரியாதானே சேர்ந்திருக்கு!

நாடோடி இலக்கியன் said...

நன்றி குமார்.

நன்றி மஞ்சூர் ராஜா,