Wednesday, July 11, 2012

ஓவிய சார்.

ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை எனது கிராமத்திற்கு பக்கத்து ஊரில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில்(தற்போது மேநிலைப் பள்ளி) படித்தேன். அதே பள்ளியில்தான் எனது அப்பாவும் ஆசிரியராக பணியாற்றியதால் அங்கு பணியாற்றிய அத்தனை ஆசிரியர்களோடும் முன்னமே அறிமுகம் இருந்தது. 

இருப்பினும் ஆறாம் வகுப்பில் சேர்ந்தப் புதிதில் மிகவும் பிடித்த ஆசிரியராய் இருந்தவர் ஓவிய ஆசிரியர் நாடிமுத்து சார். நாடிமுத்து சாருக்கு அதே ஊர், பள்ளிக்கு அருகிலேயே அவரின் வீடும் இருக்கும். நாடிமுத்து சாரையும் சேர்த்து மூன்று ஆசிரியர்கள் எனது அப்பாவின் முன்னாள் மாணவர்கள் அங்கே ஆசிரியராக இருந்தார்கள்.

வாரத்தில் இரண்டு நாட்கள் ஓவிய வகுப்புகள் இருக்கும். ஆனாலும் எப்போது எங்களுக்கு ஃப்ரி டைம் கிடைத்தாலும் மொத்த வகுப்புமே சேர்ந்து ஓவிய சாரைத் தேடிப்போய் ”சார், எங்க கிளாஸுக்கு வாங்க சார்,ப்ளிஸ் சார்” என்று கெஞ்சுவோம். காரணம் அவர் சொல்லும் கதைகள்.

பொன்னியின் செல்வன், கடல் புறா போன்ற சரித்திர நாவல்களின் அறிமுகம் அவராலயே கிடைத்தன. காட்சிகளை அவர் விவரிக்கும் போது இருக்கும் அந்த ரியாக்‌ஷன்களை அத்தனை எளிதாய் விவரித்துவிட முடியாது. சட் சட்டென்று மாறும் முக பாவங்களை கேட்டுக்கொண்டிருக்கும் எங்களின் முகத்திலும் பிரதிபலிக்கச் செய்யும் சாகசக்காரர். அன்று அவர் எங்களுக்கு விவரித்த காட்சிகளில் நிறைய தனது சொந்த திரைக்கதை என்பது இப்போது இந்த நாவல்களை படிக்கையில் புரிந்தாலும் அந்த வயதிற்கு எங்களுக்கு எப்படிச் சொல்லனுமோ அப்படிச் சொல்லியிருக்கிறார் என்பதையும் உணர்கிறேன்.

எனது பிரியமான ஆசிரியர் அடுத்தடுத்த வருடங்களில் பிடிக்காத ஆசிரியராகி  பத்தாம் வகுப்பு படிக்கும்போது அவரை ஒரு எதிரியைப் போல நினைக்கத் தொடங்கியிருந்தேன். மற்ற மாணவர்களும் அப்படித்தான். மற்றவர்கள் அவரை வெறுக்க இருந்தக் காரணம் சவுக்குக் குச்சியால் விளாசித் தள்ளுவதாய் இருந்தபோது எனக்கான காரணம் வேறாய் இருந்தது.

இண்டர்வெல் நேரத்தில் மாணவர்களுக்கு வைத்திருக்கும் குடிநீர் ட்ரம்மில் சில நேரம் டம்ளர் இருக்காது. அந்த மாதிரி நேரங்களில் ஆசிரியர்கள் ஓய்வு அறையில் இருக்கும் டம்ளர்களை எடுத்துக்கொண்டு வந்துக் கொடுப்பேன். எனது அப்பா ஆசிரியராக இருந்ததால் இது ஒரு அட்வாண்ட்டேஜ். ஒரு முறை இந்த மாதிரி டம்ளரை எடுத்து கொடுத்தபோது, ” உங்க அப்பா வாத்தியாரா இருந்தா உன் இஷ்டத்திற்கு ஸ்டாஃப் ரூமில் நுழைவியா” என்று சொல்லி அடி பிரித்தெடுத்திவிட்டார். அங்கே ஆரம்பமானது அவரை வெறுக்கும் படலம். அதன் பின் ஸ்டாஃப் ரூமிற்கே போறதில்லை. மதிய உணவுகூட அது நாள் வரை அப்பாவுடன் சேர்ந்து சாப்பிடுவடு தான் வழக்கம் ,அதன் பிறகு தனியாக சாப்பாடு கொண்டு செல்ல ஆரம்பித்தேன். 

ஓவிய வகுப்பில் எத்தனை நன்றாக ஓவியம் வரைஞ்சிருந்தாலும் எனக்கு மட்டும் பத்திற்கு முன்று அல்லது நான்கைத் தாண்டி மதிப்பெண்கள்போடவே மாட்டார்.  ”நீயும் ஒரு ஸ்டூடண்ட்தான் , உனக்கு தனியா சலுகை கொடுக்க முடியாது” என்று அடிக்கடி திட்டுவார்.

பள்ளிக்கு அருகில் இருக்கும் கோயிலில் எனது ஊரைச் சேர்ந்த மற்ற மாணவர்களோடு மதிய உணவு இடைவேளையின் போது எப்போதும் விளையாடுவது வழக்கம். ஒரு நாள் அப்படி விளையாடிக்கொண்டிருந்தபோது, எல்லோரையும் கூப்பிட்டு கிரவுண்டில் விட்டு விளாசினார். அப்போதும்கூட ”நீதாண்டா எல்லாரையும் அழைச்சிட்டு போயிருப்ப” என்று சொல்லி கூடுதலா நாலு சாத்து சாத்தினார் என்னை.  

பத்தாம் வகுப்பில் அரையாண்டுத்தேர்விற்குப் பிறகு ஓவிய வகுப்புகளில் மற்றப் பாடங்களை ரிவிஷன் பண்ணச் சொல்லியிருந்தால் அவர் வருவதில்லை. அது கடைசி பிரியடாகவும் இருந்தது. அப்போது நான் ஒரத்தநாட்டிற்கு கணிதத்திற்கு ட்யூஷன் சென்று கொண்டிருந்தேன். வாரத்தில் சனி,ஞாயிறு மற்றும் வியாழன் மூன்று நாட்கள் ட்யூஷன் இருக்கும். வியாழக்கிழமை மாலை 5.30க்கு ட்யூஷன் தொடங்கும், பள்ளியில் இருந்து ஒரத்தநாட்டிற்கு சைக்கிளில் செல்ல முக்கால் மணி நேரம் ஆகும். பள்ளி முடிந்ததும் அவசர அவசரமாக செல்ல வேண்டியிருக்கும். ஒரு நாள் ஓவிய  பிரியடில், அவர்தான் இப்போது வருவதில்லையே என்று எண்ணி, அசால்ட்டாக மணி அடிப்பதற்கு முன்பே சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தேன். கேட்டிற்கு அருகில் நின்றவர் அன்று நடந்து கொண்ட விதத்திலிருந்துதான் அவரை எதிரியாய் பாவிக்கத் தொடங்கினேன். 

அவர் என்னை குறி வைத்து டார்ச்சர் பண்ண  சம்பவங்கள் இப்படி இன்னும்கூட சில இருக்கின்றன. இவரின் நடவடிக்கைகளை என் அப்பாவிடம் ஒரே ஒரு முறைதான் சொன்னேன். ”அவன் உன்னோட ஆசிரியர், அடிச்சா வாங்கிக்க” என்றதோடு நிறுத்திக்கொண்டார்.

பிறகு தஞ்சைக்கு மேநிலை வகுப்பிற்கு வந்த பிறகு, ஒரு நாள் பஸ்ஸில் ஓவிய சார் வந்தார். அப்போது நான் அமர்ந்திருந்தேன். அவர் நின்றுகொண்டு வந்தார். எப்போதுமே தெரிந்தவர்கள் வந்தால் எழுந்து இடம் கொடுக்கும் நான் அவரை கண்டுக்காதது போலவே அமர்ந்திருந்தேன். வெறுப்பின் உச்சத்தில் இருந்த நேரம் அது.

இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களில் எனக்கு அப்பண்டிசைடிஸ் ஆப்பரேஷன் நடந்தது. அப்போது என்னைப் பார்க்க ஹாஸ்பிடலுக்கு வந்தார் ஓவிய சார். எனது கையைப் பிடிச்சிகிட்டு ரொம்ப நேரம் என்னென்னவோ பேசிகிட்டு இருந்தார். அப்போது அவர் மீதான வெறுப்பு  கொஞ்சம் குறையத் தொடங்கியது, ஆனாலும் அதன் பிறகு எங்கு பார்த்தாலும், பேருக்கு ஒரு வணக்கத்தோடு நகர்ந்து விடுவேன்.

எம்.சி.ஏ கரஸில் படித்தேன். அந்த சமயத்தில் ஃப்ரீ டைம் நிறைய இருந்ததால் அதே பள்ளிக்கு கணித ஆசிரியராக பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலமா இரண்டு வருடங்கள் பணியாற்றினேன். அப்போதும் ஓவிய சார் அங்குதான் வேலை பார்த்தார். சர்க்கரை வியாதியால் மிகவும் இளைத்து போயிருந்தார். முன்புபோல் மாணவர்களை அடிப்பதெல்லாம் நிறுத்திவிட்டிருந்தார். அந்த இரண்டு வருடங்களில்தான் ஓவிய சாரின் மேல் நான் வைத்திருந்த வெறுப்பு முற்றிலும் மறைந்து மறக்க முடியாத மனிதராக ஆனார்.

”உன் அப்பாவிடம் இருக்கும் கம்பீரம் உன்னிடமும் இருக்குடா, அவர் பார்வையாலே ஸ்டூடன்ஸை அடக்குவார், உனக்கும் அதே மாதிரி பயப்படுறானுங்க, எவ்வளவு மிரட்டினாலும் உங்க அப்பாதான் எங்களுக்கு பிடிச்ச வாத்தியார், அதே மாதிரிதான் உன்னைச் சுற்றியும் பசங்க சார் சார்னு சுத்துரானுங்க” என்று சொல்லுவார்.

”நாளைக்கு சாப்பாடு கொண்டு வர வேண்டாண்டா உனக்கு ஸ்பெஷலா வீட்டில் சமைக்கச் சொல்லியிருக்கேன்” என்று சொல்லி நிறைய தடவை சாப்பாடு எடுத்துட்டு வந்து கொடுத்திருக்கார். அந்த இரண்டு வருடங்களில் அவர் வீட்டில் நான்வெஜ் செய்த நாட்களிலெல்லாம் எனக்கு அவர் வீட்டு சாப்பாடுதான்.

நான் பாடம் எடுத்துக்கொண்டிருக்கும்போது எனக்குத் தெரியாமல் சில முறை கவனித்துவிட்டு, ”கிராமத்து பசங்களுக்கு ஏத்த  மாதிரி  டீச் பண்ணறடா, நீ பேசாம பி.எட் செய்திருக்கலாம்டா” என்று பாராட்டியிருக்கிறார். அவர் மகன் என்னிடம் பயின்றான். அவனுக்கு பிடித்த ஆசிரியராய் என்னை அவரிடம் சொன்னதை அவ்வளோ ஒரு மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார்.

பிறகு சென்னைக்கு வந்த பிறகு அவரிடம் டச் இல்லாமல் போய்விட்டது. சென்ற வருடத்தில் ஒரு முறை ஊருக்கு சென்றுகொண்டிருந்தபோது இரவு முழுக்க அவரைப் பற்றிய நினைவுகள் அடிக்கடி வந்துகொண்டே இருந்தன. காலையில் பஸ்ஸைவிட்டு இறங்கும்போதே எதிரே இருந்த சுவரில் ஒட்டியிருந்த பதினாறாம் நாள் அஞ்சலி போஸ்டரில் சிரித்தபடியிருந்தார் ஓவிய சார்.

அன்று ஏன்  அவரின் நினைவு மீண்டும் மீண்டும் எனக்கு வந்ததுன்னு இப்போ வரைக்கும் ஆச்சர்யமாகவும்,குழப்பமாகவுமே இருக்கு.

6 comments:

vasu balaji said...

குட் வன்

'பரிவை' சே.குமார் said...

நினைவுகள் தாலாட்டும்...
நல்ல ஆசிரியரைப் பற்றிய பதிவு,

Venkie said...

very touching. your narrating style is fantastic. u can choose a screeplay writing path also. may be, give a try...

நாடோடி இலக்கியன் said...

அனைவருக்கும் நன்றி.

Kandan s said...

அறுமை

Kandan s said...

அறுமை